Tamil News
Home செய்திகள் கடன் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தங்கியுள்ளது – உலக வங்கி

கடன் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தங்கியுள்ளது – உலக வங்கி

தளம்பலான அரசியல் நிலைவரம் மற்றும் நிதியியல்துறைசார் தளம்பல்கள் என்பன கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் நிலையற்றதன்மையைத் தோற்றுவித்திருந்தன.

அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய கூறுகள் கடன் மறுசீரமைப்பிலும், வளர்ச்சியை விரிவுபடுத்தக்கூடிய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களிலுமே தங்கியிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்குரிய இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் கடந்த 12 மாதங்களில் இலங்கையின் பொருளாதார நிலைவரம், தற்போது அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள், எதிர்வருங்காலங்களில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் கடந்த ஆண்டு வலுப்பெற்ற பொருளாதார நெருக்கடியின் விளைவாக கைத்தொழில் மற்றும் சேவைத்துறையில் சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்ததுடன் விவசாயத்துறைசார் தொழில்வாய்ப்புக்களால் வருமான இழப்பை ஈடுசெய்யமுடியாத நிலையேற்பட்டது.

இப்பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்ட வாழ்க்கைச்செலவு உயர்வானது வறுமை மட்டம் இருமடங்காகவும், மும்மடங்காகவும் அதிகரிப்பதற்குக் வழிவகுத்தது. குறிப்பாக இந்நெருக்கடியினால் பெருந்தோட்டப்பகுதிகளில் 52 சதவீதமானோர் வறுமைக்குள் தள்ளப்பட்டதுடன் நாடளாவிய ரீதியில் சமத்துவமின்மை உயர்வடைந்தது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் 8.1 பில்லியன் டொலராகப் பதிவான வர்த்தக மீதி கடந்த ஆண்டு 5.2 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்தது.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 7.2 சதவீதமானோரின் வருமான மார்க்கங்கள் தடைப்பட்டதுடன், அவர்கள் தமது அன்றாட உணவுத்தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதற்குப் பல்வேறு மாற்றுவழிகளைக் கையாள முற்பட்டதன் விளைவாக ‘உணவுப்பாதுகாப்பின்மை’ அச்சுறுத்தல் நிலை வலுப்பெற்றது.

கோவிட் – 19 பெருந்தொற்று உள்ளடங்கலாகப் பல்வேறு நெருக்கடிகளால் கடந்த 5 வருடகாலத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு என்பன மந்தகரமான நிலையிலேயே காணப்பட்டன.

எனவே தளம்பலான அரசியல் நிலைவரம் மற்றும் நிதியியல்துறைசார் தளம்பல்கள் என்பன கடந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரத்தில் நிலையற்றதன்மையைத் தோற்றுவித்திருந்தன. அதன்படி தற்போது பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்புடைய கூறுகள் கடன் மறுசீரமைப்பிலும், வளர்ச்சியை விரிவுபடுத்தக்கூடிய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களிலுமே தங்கியுள்ளன. அதேபோன்று நடுத்தரகாலத்தில் வரவு, செலவுத்திட்டப்பற்றாக்குறை படிப்படியாக வீழ்ச்சியடையும் என்றும் அதனைத்தொடர்ந்து பணவீக்கம் குறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தியாவசியமான நுண்பாகப்பொருளாதார மறுசீரமைப்புக்கள் பொருளாதார வளர்ச்சியிலும், வறுமையிலும் எதிர்மறையான உடனடித்தாக்கத்தை ஏற்படுத்தினாலும்கூட, பின்னர் அது அனைத்துத் தளம்பல்களையும் சீர்செய்வதுடன் மீண்டும் சர்வதேச நிதியியல் சந்தையை நாடுவதற்கும், நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்குரிய அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பெரிதும் உதவும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Exit mobile version