இலங்கையின் பொருளாதார நெருக்கடி-  பெண்கள்,சிறுவர்கள் பாதிக்கப்படும் அபாயம்

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகமோசமாகப் பாதிக்கப்படுவர் என ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியப்பிராந்திய இணை அலுவலகத்தின் தலைவர் மிஹிகோ டனகா எச்சரித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மிஹிகோ டனகா மேற்குறிப்பிட்டவாறு எச்சரித்துள்ளார்.

இவ்வாறானதொரு அச்சுறுத்தல் நிலைக்கு மத்தியில் பெண்களால் முன்னெடுக்கப்படும் சிறியளவிலான முயற்சியாண்மைகள் மற்றும் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் குடும்பங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களை இந்த நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கான சாத்தியப்பாட்டை அதிகரிக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களின் சிறியளவிலான வணிக முயற்சியாண்மைகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி கிராமப்புறங்களிலும் பின்தங்கிய பிரதேசங்களிலும் வசிக்கும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறிய வணிக முயற்சியாண்மைகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கும், அவற்றை சிக்கல்களின்றித் தொடர்வதற்கு அவசியமான வளங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.