“இரத்தத்தில், உணர்வில் கலந்த பிரச்சினையாக இலங்கை பிரச்சினை உள்ளது“- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

“இரத்தத்தில், உணர்வில் கலந்த பிரச்சினையாக இலங்கை பிரச்சினை உள்ளது, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு கைகொடுக்க வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைபாடு” என இன்றைய தினம் இலங்கை மக்களுக்கு உதவி செய்வது குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிடும் பொருட்டு தமிழ்நாடு அரசு அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு முதலிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க தயாராக உள்ளது. இதற்கு மத்திய அரசு தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஏற்கெனவே மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. எனினும் இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து எவ்விதமான தெளிவான பதிலும் இதுவரை பெறப்படவில்லை.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதி வழங்க வேண்டும் என சட்டசபையில் தனித்தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து பேசிய அவர், மனிதாபிமான அடிப்படையில் கை கொடுக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு. மக்கள் படக்கூடிய துன்பங்கள் துயரங்கள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மண்ணென்னை வாங்க 6 மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. பேருந்து ரயில்கள் போக்குவரத்து சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. தேயிலை தோட்டங்களில் பணிப்புரிய கூடிய தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால் விலை, பால் பவுடர் உணவுப்பொருட்கள் விலை அனைத்தும் 100%உயர்ந்துள்ளதால் பச்சிளம் குழந்தைகள் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து உரிய அனுமதிகளை வழங்கவேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது என்றார்.

Tamil News