இலங்கை-பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டது-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பிச்சை எடுத்து உண்ணும் நிலைக்கு நாடு வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், நாட்டின் தேசிய பாதுகாப்பை முற்றாக ஒழித்து விட்டது. இராணுவத்தின் ஆட்சியையே இவர்கள் தேசிய பாதுகாப்பாகக் கருதினார்கள்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட காரணிகளான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளை தேசிய பாதுகாப்பாக இவர்கள் கருதவில்லை.   அதோடு, இதனால் உலகளவில் ஏழ்மையான நாடுகளில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது.

தற்போது வெளிநாடுகளிடமிருந்து பிச்சை எடுத்து உணவை உட்கொள்ளும் நிலைக்கு நாடு வந்துள்ளது. பிச்சை எடுக்கும் நிலையில் நாட்டின் பெருமதிப்பு மிக்க சொத்துகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியிலும் இலஞ்ச, ஊழல் செயற்பாடுகளை ஆளும் தரப்பினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இப்படியான ஆட்சியாளர்களுடன் ஒருபோதும் பங்காளிகளாக இணைந்து ஆட்சியை அமைக்க போவதில்லை, அவ்வாறு செய்தால் நாட்டு மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது ஆகிவிடும்” என மேலும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.