இலங்கை-ஓராண்டு காலத்திற்கு சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் பணியாற்ற அமைச்சர்கள் இணக்கம்

எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் கடமையாற்ற அனைத்து இலங்கை அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை கூட்டத்தில் நேற்றைய தினம் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையின் நாளொன்றின் வருமானம் 4 பில்லியனாக காணப்படுகின்ற நிலையில், நாளொன்றின் செலவீனமாக 9.6 பில்லியன் ரூபாய் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், நாடு நாளாந்தம் பாரியளவிலான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனை கருத்தில்கொண்டு, எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு அனைத்து அமைச்சர்களும் சம்பளத்தை பெற்றுக்கொள்ளாதிருக்கும் வகையில், பிரதமரினால் அமைச்சரவை பத்திரமொன்று நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, இலங்கை அமைச்சர்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாது பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Tamil News