70 நாடுகளில் இலங்கை முன்னணியில்
உலகளாவிய நெருக்கடியில் சுமார் 70 நாடுகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளது என பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
வணிக வங்கிகளின் தலைவர்களுடன் இன்று பிரதமர் ரணில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். அத்தியாவசிய வங்கி வாடிக்கையாளர்களின் தேவைகளின் அடிப்படையில் கடன் செலுத்துகையை ஒத்திவைப்பு தொடர்பான நிவாரணம் வழங்குவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கி பிரதானிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அதில் உரையாற்றிய ரணில், ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். இந்த நிலையான கொள்கைகள் மட்டுமே நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சிறந்த வழிமுறை.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எதிர்காலத்தில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் 70 நாடுகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன. அந்த நாடுகளில் இலங்கை முன்னணியில் உள்ளது.
மேலும் சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் அதிகம் நிலவுவதாக தெரிவித்த பிரதமர், சர்வதேச உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயமும் இந்த தருணத்தில் காணப்படுவதாவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சரியான கொள்கைகள் எடுக்கப்பட்டால் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று பிரதமர் விளக்கினார்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்படும் வரை இந்தப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வைக் காண்பது கடினம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.