சுகாதார நெருக்கடியில் இலங்கை – WHO

இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் என  தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின்  மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவான பதில்களை உறுதி செய்ய முயல்வதாக குறிப்பிட்டுள்ளது.

மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் அதிகரித்துவரும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரிதமாக சுகாதார நெருக்கடியாக மாறிவருகின்றது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

மருந்துகள் மற்றும் சத்திரகிசிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த வரவு செலவுதிட்ட மதிப்பீடு 300 மில்லியன் டொலர்கள் என தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 2023 இல் இதுவரை இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மூலம் 80 மில்லியன்  டொலர்களே கிடைத்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு இன்னமும் 220 மில்லியன் அமெரிக்க டொலர் தேவையாகவுள்ளது இலங்கையின் சகாக்களுடன் இந்த இடைவெளியை அவசரமாக நிரப்பவேண்டிய தேவையுள்ளது எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

பொருளதார நெருக்கடிகள் சுகாதார துறைக்கு பல சவால்களை அளித்த என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களின் விநியோகத்தை வலுப்படுத்துவதற்கும்சமூகம் நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு உதவுவதற்கும் நாங்கள் சகாக்களின் உதவியை பெறவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுகாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதத்தில் உலக சுகாதார ஸ்தாபனம் அனைவருக்கும் முக்கிய உயிர்காக்கும் மருந்துகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய மருந்துகள் மற்றும் விநியோகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளது.