இலங்கை: அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருள் வழங்க அரசு முடிவு

இலங்கையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இரவு நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, துறைமுகம், சுகாதாரம், அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகம், விவசாயம், விவசாய பொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு, பெட்ரோல் மற்றும் டீசலை பெட்ரோலிய கூட்டுதாபனம் விநியோகிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தரப்பினர், தமது வீடுகளில் இருந்தவாறு தமது பணிகளை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள அசௌரியமான சூழ்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை முறையாக பயன்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tamil News