சர்வதேச நாணய நிதியத்திடம் எந்த உதவியையும் இலங்கை எதிர்பார்க்க முடியாது- பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம்

இலங்கை அதன் அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீளும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவிச்செயற்திட்டம் இலங்கைக்குக் கிட்டப்போவதில்லை என்று ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து விடயங்களும் தொடர்ந்து நெருக்கடி நிலையில் இருக்கும்போது சர்வதேச நிதியத்தினால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாது.

எனவே ஸ்திரமான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நிதியமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு யாரும் இருக்கப்போவதில்லை’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கடந்த சில மாதங்களாக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், பாராளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டதன் பின்னரும் அந்நெருக்கடி நிலைவரம் தொடர்கின்றது.

அதுமாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளும் தடைப்பட்டிருக்கும் பின்னணியில், ‘தமது நிதி மீளச்செலுத்தப்படமாட்டாது என்ற நிலை காணப்படும்போது சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கமுன்வராது’ என்று பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம் தெரிவித்துள்ளார்.

‘அதற்கான உரியவாறான உத்தரவாதத்தை இலங்கையால் வழங்கமுடியாவிட்டால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எந்தவொரு உதவியையும் எதிர்பார்க்கமுடியாது’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.