‘இலங்கை பட்ஜெட் 2022’ பாராளுமன்றத்தில் தாக்கல்: சில முக்கிய தகவல்கள்

பாராளுமன்றத்தில் தாக்கல்

இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்படி, இன்றைய தினம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் 7 தினங்களுக்கு இடம்பெற்று, 22ம் திகதி வாக்கெடுப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து, 3ம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்ட அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்.  

  1. காணாமல் போனோருக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  2. 3 வருடங்களில் மலையக மக்கள் வாழும் லயின் வீடுகளை இல்லாது செய்வதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டிற்காக தனி வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  3. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
  4. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வேன் மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  5. சுமார் 2 தசாப்தங்களுக்கு அதிகமாக காணப்பட்ட அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே தடவையில் தீர்க்கும் வகையில், மேலதிகமாக 30,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
  6. 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஆட்சி செய்த அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  7. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு அதிவிரைவு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  8. நாடு முழுவதும் உள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகளை பாதுகாக்கும் நோக்கில், முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
  9. மதுபானத்திற்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதுடன், சிகரட்டிற்கான விலையும் உடன் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.
  10. விபத்துக்குள்ளாகும் வாகன சாரதிகளிடமிருந்து நட்டஈட்டு தொகையொன்றை அறவிடுவதற்கான யோசனையும், எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

ilakku Weekly Epaper 155 November 07 2021 Ad 'இலங்கை பட்ஜெட் 2022' பாராளுமன்றத்தில் தாக்கல்: சில முக்கிய தகவல்கள்