Tamil News    
Home செய்திகள் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடபெற்ற விசேட கூட்டம்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடபெற்ற விசேட கூட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை மற்றும் செயற்குழுவின் விசேட கூட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை (06) பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றன.

தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் எதிர்கால நகர்வுகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆராயும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நாடு தழுவிய ரீதியில் கட்சியை மறுசீரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.

இதற்கமைய கட்சியின் உயர்மட்டப் பதவிகளான சிரேஷ்ட உபதலைவர்கள், உபதலைவர்கள் மற்றும் பிரதிச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க செயற்குழு இன்று ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது. அடிமட்டத்திலுள்ள கிளைச் சங்கங்களை பலப்படுத்தி, புதிய உறுப்பினர்களை உள்வாங்குவதன் ஊடாக கட்சியை மீண்டும் ஒரு பலமிக்க அரசியல் சக்தியாக மாற்ற தாங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிலைவரம் குறித்து அதிருப்தி வெளியிட்ட அவர், அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, நிலக்கரி இறக்குமதியில் நிலவும் குளறுபடிகள் மற்றும் நோரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் தற்போதைய நிலைமை காரணமாக, நாடு மிக விரைவில் பாரிய மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இவ்வாறான இக்கட்டான சூழலில், மக்களின் குரலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து செயற்படும் என அவர் வலியுறுத்தினார்.

Exit mobile version