இலங்கையில் இனங்களிற்கிடையில் குரோதம் ஏற்பட்டு, நல்லிணக்கம் பாதிக்கப்பட்டு இந்த நாட்டிலுள்ள மக்கள் பாதாளலோகத்திற்கு செல்கின்ற சூழ்நிலை ‘ஒரே நாடு ஒரே’ சட்டம் என்ற செயலணியாலும் ஞானசாரதேரர் ஊடாகவும் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
‘ஒரே நாடு ஒரே சட்டம்‘ என்பது தொடர்பாக இலக்கு இணையத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டிற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமித்திருக்கிறார். அந்த செயலணியின் தலைவராக கலாகொட ஞானசாரதேரரை நியமித்தென்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம்.
ஞானசாரதேரர் இந்த ஆட்சி அமைவதற்கு இனங்களிற்கிடையே குரோதங்களை விளைவித்து இந்த ஆட்சியை உருவாக்குவதற்காக மிகவும் இனரீதியாக பாடுபட்ட ஒரு தேரர். அவரை திருப்திப்படுத்துவதற்காகவும் இலங்கையினுடைய தற்போதைய ஜனாதிபதி சர்வாதிகார போக்கை கடைப்பிடித்து கொண்டிருக்கிறார்.
முழுமையாக 50 க்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகளை அரச அமைச்சுக்களிலும் , நிறுவனங்களிலும் நியமித்து ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி குறிப்பாக வடகொரிய ஜனாதிபதியினுடைய நகர்வு போன்றதொரு நகர்வை இந்த ஜனாதிபதி மேற்கொண்டிருக்கிறார்.