Home செய்திகள் மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

அமெரிக்காவின் மினப்பொலிஸ் பிரதேச காவல்துறையினரின் கைகளில் சிக்கி ஜோர்ச் பிளாய்ட் மரணித்ததைத் தொடர்ந்து உலகில் பரவிவரும் நிறவெறி எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக உலக நாடுகளில் உள்ள நகரங்களில் வைக்கப்பட்டுள்ள நிறவெறி கொள்கையை பின்னபற்றிய மற்றும் மக்களை அடிமைகளாக நடத்தியவர்களின் சிலைகளை அகற்றும் பணிகளை போராட்டக்காரர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள கூட்டமைப்பு நினைவுச்சின்னங்களை அகற்றியவர்கள் தற்போது ஐரோப்பாவை நோக்கி நகர்ந்துள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் ஐரேப்பியா நாடுகளில் இடம்பெறும் சம்பவங்களை இங்கு தருகின்றோம்.

பிரித்தானியா:

எட்வேட் கோல்ஸ்ரன் – 17 ஆம் நூற்றாண்டில் அடிமைகளை பணிக்கு பிரித்தானியாவின் பிறிஸ்ரல் துறைமுகத்திற்கு கொண்டுவந்தவர். 80,000 மேற்பட்ட ஆபிரிக்க மக்களை அடிமைகளாக அழைத்துவந்திருந்தார்.

வாரம் இவரின் சிலை கடலில் தூக்கி வீசப்பட்டபோதும், தற்போது பிரித்தானியா அரசு அதனை மீட்டு தொல்பொருள் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளது.Edward colston மக்களை அடிமைகளாக நடத்தி ஆட்சி புரிந்தவர்களின் சிலைகள் அகற்றப்படுகின்றன

சிலில் றொடெஸ்- தென்ஆபிரிக்காவின் கேப் பிரேதேசத்தில் காலணித்துவ பிரதமராக பதவி வகித்தவர். வைரம் மற்றும் தங்க சுரங்கங்களில் ஆபிரிக்க மக்களை அடிமைகளாக பணிக்கு வைத்திருந்தவர். இவரின் சிலை 2015 ஆம் ஆண்டு ஆபிரிக்காவின் கேப் நகரில் இருந்து அகற்றப்பட்டிருந்தது.

எனினும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற அவருக்கு அங்கு வைக்கப்பட்டுள்ள சிலையை அகற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் தற்போது எழுந்துள்ளது.

ஹென்றி டுன்டாஸ் – 18 ஆவது நுற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்கொட்லாந்து அரசியல்வாதியாக இருந்த இவர் அடிமைச் சட்டத்தின் நீக்கத்தை எதிர்த்தவர். இதனால் ஏற்பட்ட கால இடைவெளியில் 500,000 ஆபிரிக்க மக்கள் அடிமைகளாக அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்து கொண்டுவரப்பட்டனர். ஸ்கொட்லாந்தின் தலைநகர் எடின்பரோவில் உள்ள இவரின் சிலை அகற்றப்படவேண்டும் எனவும், அவரின் நினைவாக கனடாவின் ரொரன்டோ நகரில் உள்ள வீதிக்கு சூட்டப்பட்ட பெயர் மாற்றப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

றொபேட் மிலிகன் – 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வர்த்தகர் இவர். ஜமேக்காவில் இரண்டு சக்கரை ஆலைகளை நடத்தியதுடன், 500 அடிமைகளை அங்கு பணியில் அமர்த்தியிருந்தார். அவரின் சிலை இந்த வாரம் லண்டனில் அகற்றப்பட்டுள்ளது.

றொபேட் பேடன் பாவல் – சாரணர் இயக்கத்தை ஆரம்பித்த இவர் ஒரு இனவாதி என்பதுடன் ஜேர்மன் சர்வதிகாரி கிட்லருக்கு ஆதரவான கருத்தை கொண்டவர். இவரின் சிலையை அகற்றுவது தொடர்பில் அதிகாரிகள் சிந்தித்து வருவதுடன், பிரித்தானியாவின் பல நகரங்களில் உள்ள சிலைகளை மீளாய்வு செய்யவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரான்ஸ்

ஜீன் பபிரிஸ்ற் கொல்பேட் – பிரான்ஸ் அரசர் 14 ஆவது லூயிஸ் காலத்தில் 17 ஆம் நூற்றாண்டில் அமைச்சராக இருந்த இவர் கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக அடிமைச்சட்டத்தை வரைவதில் முன்னின்றவர். பிரான்ஸ் நகரசபை முன் உள்ள இவரின் சிலையை அகற்றுவதற்கு கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி எடுத்திருந்தனர்.

ஜேசெப் கலினி – 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரான்ஸ் நாடு ஆக்கிரமித்திருந்த மடகஸ்கார் பகுதியில் போராட்டங்களை மேற்கொண்டவர்களை மிருகத்தனமாக அடக்கிய படைத் தளபதி இவர். இவரின் சிலையை தற்போது பிரான்ஸ் காவல்துiயினர் பாதுகாத்து வருகின்றனர்.

விக்ரர் சொல்செர் – பிளொய்டின் மரணத்திற்கு முன்னரே இவரின் சிலை அகற்றப்பட்டுள்ளது. கரீபியன் தீவுகளில் இருந்த பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள அடிமைச்சட்டத்தை நீக்குவதற்கு உதவியவர் என்றபோதும் அவரின் செயற்பாடுகளில் அடிமைத்தனத்தை ஆதரித்ததற்கான சான்றுகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஸ்பெயின்

கிறிஸ்தோபர் கொலம்பஸ் – 15 ஆம் நூற்றாண்டு வாழந்த இவர் அமெரிக்காவை கண்டறிந்து குடியேற்றங்களுக்கு வழி அமைத்தவர். அவரின் சிலை அமெரிக்காவிலும், ஸ்பெயினிலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல் முயற்சிக்கு உட்படடிருந்தது. கொலம்பஸ் நினைவு நளையும் அமெரிக்க பூர்வகுடி மக்கள் எதிர்த்து வருகின்றனர்.

ஜெனரல் பிரான்சிஸ்கோ பிரான்கோ – ஸ்பெயினை 35 ஆண்டுகள் ஆட்சி செய்த சர்வாதிகாரி. இவரின் உடல் கடந்த வருடம் அரும்பொருட் காட்சிப்படுத்தலில் இருந்து அகற்றப்பட்டு சிறிய தேவாலய வளாகத்தில் புதைக்கப்பட்டுள்ளது.

இத்தாலி

இன்ரோ மொன்ரநெலி – வட ஆபிரிக்காவில் இத்தாலியின் ஆக்கிரமிப்பின் சின்னம். 12 வயது எதியோப்பிய சிறுமியையும் அடிமையாக வைத்திருந்தார். இவரின் சிலை அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

பெல்ஜியம்

அரசர் லிபோல்ட் இரண்டு – 1865 தொடக்கம் 1909 வரை பெல்ஜியத்தை ஆட்சி புரிந்தவர். கொங்கோ நாட்டை தனது சுய தேவைக்காக பயன்படுத்தியவர்.

மிருகத்தனமான துன்புறுத்தல்களை மேற்கொண்டு 10 மில்லியன் மக்களை அங்கு படுகொலை செய்தவர். இவரின் சிலைகள் பல சேதமாக்கப்பட்டுள்ளதுடன், பல வர்ண மைகள் பூசப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.

நெதர்லாந்து

ஜான் பிரெர்ஸ்சூன் கொயின் – 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் கிழக்கிந்திய நிறுவனங்கள் மூலம் கிழக்கு இந்தியா, இந்தோனேசியா போன்ற பகுதிகளை ஆக்கிரமித்தவர். இந்தோனேசியாவின் பண்டா தீவுகளில் மேற்கொள்ளப்பட்ட பெருமளவான படுகொலைகளுக்கு உத்தரவிட்டவர். தற்போது இவரின் சிலையை அகற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவிஅசோசியட் பிரஸ்

தமிழில்பிரபா

Exit mobile version