டெங்கு நோய் பாதிப்பு தீவிரம் – பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

டெங்கு நோய் பாதிப்பு தீவிரம்

இலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், 6, 261 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில், 4,522 என்ற அளவில், அதிக எண்ணிகையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில் 1,511 டெங்கு நோயாளர்களும், மார்ச் மாதத்தின், இதுவரையான காலப்பகுதியில் 228 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். இடைக்கிடையே மழை பெய்கின்றமையால், மீண்டும் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்கள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வலியுறுத்தியுள்ளது.