Home நேர்காணல்கள் எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலைக்கு திமுக தடையாக இருப்பது ஏற்புடையதல்ல – மே 17 கருத்து

எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலைக்கு திமுக தடையாக இருப்பது ஏற்புடையதல்ல – மே 17 கருத்து

எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலை

எழுவர் மற்றும் இஸ்லாமியர் விடுதலை: கடந்த செப்டம்பர் 13ம் திகதி தமிழக சட்டசபையில்  பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,  மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் தண்டனை சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்று  அறிவித்தார்.

ஆனால் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 20 வருடங்களுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7பேரும் இந்த விடுதலை அறிவிப்பில் உள்ளடக்கப் படவில்லை என்பதோடு பல ஆண்டுகளாக ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருந்து வரும் இஸ்லாமிய கைதிகளையும் விடுதலை செய்வது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் படவில்லை. மேலும் திமுக-வின் தேர்தல் அறிக்கையில் எழுவர் விடுதலை குறித்து வாக்குறுதிகள் வழங்கப் பட்டிருந்தும், அவர்கள் இந்த விடுதலை அறிவிப்பில் உள்ளடக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி.

கேள்வி :
எழு பேரின் விடுதலை தொடர்பில் இந்திய மத்திய அரசு அடிப்படை மனித உரிமை விதிமுறைகளை மீறி செயற்படுகின்றதா?

பதில் :
இந்திய ஒன்றிய அரசு 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாட்டு சட்டசபை தீர்மானத்தை அதன் பின்னர் அரசு கொண்டுவந்து பிற முடிவுகளை ஜனநாயக ரீதியில் அங்கிகரித்து விடுதலைக்கான பங்களிப்பினை செய்திருக்க வேண்டும். ஆனால் அது முரண்பட்ட நிலையில் இவர்களின் விடுதலையை தடுத்து நிறுத்து வதற்கான அனைத்து வழிகளையும் ஒன்றிய அரசு கட்டுப்பாட்டுடன் கூடிய ஆளுநர் வழியாக செய்து வருகின்றது.

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தை அங்கிகரிக்காமல் ஆளுனர் காலம் தாழ்த்துவது என்பதனை நாம் தொடர்ச்சியாக நடந்து வருவதை பார்த்து வருகின்றோம்.

ஜனாதிபதியும் இதற்கு  ஒப்புதலை வழங்காத நிலை என்பது ஒன்றிய அரசினுடைய, பா.ஜ.க அரசினுடைய, தமிழர் விரோத நிலையை தான் காட்டி வருகின்றது.  இது தான் ஒன்றிய அரசினுடைய நிலைப்பாடு குறித்தான நமது பார்வையாக இருக்கின்றது.

கேள்வி :
இந்தியாவின் இவ்வாறான அணுகுமுறைகளால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மட்டும் அதிகம் பாதிக்கப்படுவது எதனால்?

பதில் :
இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கொள்கை என்பது இந்தியளவில் பா.ஜா.க வினுடைய கொள்கையாகவே இருந்து வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு அரசியலைத்தான் அவர்கள் கட்டி எழுப்பி வந்திருக்கிறார்கள். கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியிலும் இது போன்ற ஒரு   கொள்கை நிலைப்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன.

கடந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியும் இது போன்ற கொள்கை நிலைப்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன. ஒன்றிய அளவில் இதுபோன்ற ஒரு  நிலைப்பாடு இருந்தது. தேசிய கட்சியின் அதிகாரத்தில் இருந்த இரண்டு கட்சிகளினுடைய கொள்கையிலும் இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக பாரதிக ஜனதாக் கட்சி என்பது வெளிப் படையாகவே இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை வெறுப்பு அரசியலை உணர்த்த வந்திருக்கின்றது .

அந்த அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசி விடுதலை செய்ய கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.

சிறைவாசியின் விடுதலை என்று வந்ததன் பின்னர் அவர்களின் குற்றத்தின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ சாதியின் அடிப்படையிலோ முடிவு செய்து விட கூடாது.  ஆனால் அவர்களை சிறைவாசி என்கின்ற அவர்களின் உரிமை சார்ந்த கொள்கையாக பார்ப்பது என்பதனை தவிர்த்துவிட்டு அவர்களின் மதம் சார்ந்து அவர்களின் குற்றத்தின் பின்புலம் அல்லது  குற்றம் சாட்டப்பட்டதனுடைய பின்னணி போன்ற பல தகவல்களை எடுத்து அவர்களை மேலும் மேலும் தண்டிக் ககூடிய அரசியலை தான் பாரதீய ஜனதா கட்சியினுடைய அரசு செய்து வருகின்றது.

அதே நிலைப்பாட்டில் தமிழ் நாட்டு அரசு தி.மு.கவும் எடுத்து இப்போது ஏழு பேரினுடைய விடுதலை இஸ்லாமியர்களுடைய விடுதலை குறித்தான பின்னடைவான உத்தரவையும் வெளியிட்டு அவர்களின் விடுதலைக்கு தடையாக இருப்பதென்பது ஏற்புடையதாக இருக்க முடியாது.

ஆகவே இந்திய ப.ஜ.கட்சியின் தமிழர் விரோத அரசியல் இஸ்லாமிய விரோத அரசியல் என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு எந்தவிதத்திலும் கேள்விக்கு உள்ளாகவில்லை என்பது தான் எதிர்ப்பினுடைய மையமாக இருக்கின்றது.

இஸ்லாமிய சிறைவாசிகள்  விடுதலை, ஏழு தமிழர்கள் விடுதலை என்பது உடனடியாக சாத்தியப்பட வேண்டும் அதுதான் ஜனநாயகத்தினுடைய முழு வெற்றியாக அமைய முடியும்.

கேள்வி :
எழு பேரின் விடுதலை தொடர்பில் உங்கள் கட்சி என்ன செயல் திட்டத்தை முன்னெடுக்கின்றது?

பதில் :
எமது கட்சி எழுவர் விடுதலை குறித்து தொடர்ச்சியான போராட்ட நிலைப்பாடு களுடன் இருந்து வருகின்றது.  கடந்த 11 ஆண்டுகளில் எழுவர் விடுதலை குறித்தான பல்வேறு போராட்டங்களையும், பல்வேறு முற்றுகை போராட்டங்கள், இதற்கான கருத்தரங்குகள், பிரச்சாரங்கள் என்று தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்திருக்கின்றது.

அதே நிலைப்பாட்டினை இப்போதும் மேற்கொண்டு வருகின்றோம். இதற்குரிய போராட்டங்களில் பங்கெடுப்பது, போராட்டங்களை கட்டமைப்பது, பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பணி என்பது தொடர்ச்சியாக இருந்தவர்தான் செய்யலாம்.

ஆகவே மே 17  இயக்கம் எந்த காலத்திலும், யாருடைய ஆட்சி காலத்திலும் இந்த நிலைப்பாட்டில் இருந்து ஒரு காலத்திலும் பின் வாங்கியதும் இல்லை. பின்வாங்கப் போவதும் இல்லை.

கேள்வி :
நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் முடிவுகளை ஆளுநர் மீறுவது என்பது ஜனநாயக விரோதம் ஆகாதா?

பதில் : 
நிச்சயமாக ஜனநாயக விரோத செயலை தான் தொடர்ச்சியாக செய்து வருகின்றார். இது குறித்தான கருத்துக்களை உச்ச நீதிமன்றம் கூறிய பின்பும் கூட ஜனநாயக விரோத நிலைப்பாடு தான் ஆளுநரின் நிலைப்பாடாக இருக்கின்றது. அவர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஒரு ஆட்சி அதிகாரத்தை நடத்தி வருவதனை தான் எழுவர் விடுதலையில் காண முடிகிறது.

ஆகவே இவர்களின் அரசியல் என்பது முழுக்க முழுக்க தமிழின விரோத அரசியல், ஜனநாயக விரோத அரசியலாகவே இருக்கின்றது. அவ்வாறாகவே அவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

கேள்வி :
இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடை முறைப்படுத்த விரும்புவதாக இந்தியா தொடர்ந்து தெரிவிப்பது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில் :
இந்திய அரசு இதுபோன்ற  பசப்பு வார்த்தைகளைத்தான் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றது. 13 வது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது இந்தியாவிற்கு உறுதியிருக்கும் என்றால்  இந்தியா இலங்கை ஒப்பந்தம் நடைபெற்ற காலத்திலே 1987 இலே இதனை செய்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் 34 ஆண்டுகள் நடந்த பின்னரும் கூட  இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்காத பட்சத்தில் ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதற்கான முயற்சியையே செய்து வருகின்றது.

ஈழத்தமிழர்கள் இந்தியாவினுடைய ஆளுகைக்கு கீழ் அணி திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழர்கள் தம்வசப்படுத்தி கொண்டு அவர்கள் இலங்கையை தங்களது தேவைக்கு  ஏற்ப கையாள முடியும் என நம்புகின்றார்கள். ஈழத்தமிழர்கள் ஏமாந்து போவார்களா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Exit mobile version