வடக்கில் மீண்டும் சோதனை சாவடிகளை அமைப்பது மக்களை பாதிக்கும்-சுரேஷ் பிரேமச்சந்திரன் 

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை என்பது யுத்தத்துக்கு பின்னரே அறிமுகமானது. இன்றுவரையும் யாழ்ப்பாணம் முப்படையினுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இங்கு யார் என்ன செய்தாலும் படையினருக்கு உடனடியாகவே தகவல்கள் தெரியும்.

மஞ்சள் கடத்தப்படும் போது உடனடியாக பிடிக்கப்படுகின்றது. வேறு பொருட்கள் வரும்போது உடனடியாக கடத்தல் குழு பிடிக்கப்படுகிறது. ஆனால் போதை வஸ்து வரும் போது அவ்வாறான நிலை காணப்படுவதில்லை. கடற்படையினர் இந்திய மீனவர்கள் வரக்கூடாது என்பதற்காக பல ரோந்து நடவடிக்கையை ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.இலங்கை கடற்படை திறமையாக செயல்படும்போது கேரள கஞ்சாவை இங்கு தடை செய்ய முடிவது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.

பல்வேறு போதைப்பொருட்கள் தென்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு தாராளமாக வருகின்றது. ஆனையிறவு சோதனைச்சாவடி, வவுனியா சோதனைச் சாவடிகளை தாண்டி மிகப் பெருமளவிலான போதைவஸ்துக்கள் வருவதுடன் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணத்து வீதிகளில் சோதனைச் சாவடிகளை போடுவதால் போதைவஸ்துகளை நிறுத்திவிட முடியாது. கொழும்பிலிருந்து வரும் போதைவஸ்துகளை தடுப்பதும் இந்தியாவில் இருந்து வரும் போதைவஸ்துகளை தடுப்பதற்கும் இராணுவத்தை வீதியில் போடுவதால் நிறுத்தி விட முடியாது. பிரதான வீதிகளில் சாவடிகளை போட்டால் உள்வீதிகள் எவ்வாறு செல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

போதை வஸ்தை இல்லாமல் செய்வது நோக்கமா? சோதனைச்சாவடியை போடுவது நோக்கமா என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் இங்கு சோதனை சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களை பாதிக்கும்” என மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம் களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.