வெடுக்கு நாறி மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப்போவதாக சரத் வீரசேகர மிரட்டல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் மலை விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக மிரட்டல் தொனியில் கூறியுள்ளார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர.

நேற்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு வந்த வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் இதனை குறிப்பிட்டார். சரத் வீரசேகர மற்றும் சிங்கள மக்கள் குழுவொன்று இன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்கு வந்திருந்தனர். அவர்கள் மலையுச்சிக்கும் சென்று பார்வையிட்டனர்.

இன்று ஆலயத்தில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. வீரசேகர குழுவினரும் ஆலயத்தின் பொங்கலை வாங்கி உண்டனர். பின்னர், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தை நாடப் போவதாக சரத் வீரசேகர, அங்கு நின்றவர்களிடம் கூறினார்.

இதேவேளை, இன்று அங்கு கடுமையான மழை பெய்வதால், ஆலயத்தின் கீழ்ப்பகுதியில் 20 அடி தற்காலிக தகர கொட்டகையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுமாறு நெடுங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்தின அடிப்பகுதியில் சிறிய தகர கொட்டகையமைத்து இளைஞன் ஒருவர் குளிர்பானம் உள்ளிட்ட சில பொருட்களை விற்று வந்தார். அந்த கொட்டகையையும் அகற்றுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன், ஆலயத்துக்கு உழவு இயந்திரத்தில் வர முடியாது என்றும் குறிப்பிட்டார்.