ஜனாதிபதித் தேர்தலில் அதிரடித் திருப்பமாக சஜித் வாபஸ்! டளஸுக்கு ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக  அறிவித்திருந்த  எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,தற்போது அதிரடித் திருப்பமாக  தான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதோடு  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கு இடையில் கொழும்பில் நேற்றிரவு  சந்திப்பொன்று இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் தேர்தலில் டளஸ் வெற்றிபெற்றால் சஜித் பிரதமராக நியமிக்கப்படுவார் என்பதுதான் தேர்தல் உடன்பாடு எனத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று  வேட்புமனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதுடன், வேட்புமனுத் தாக்கலும் இதன்போது இடம்பெறவுள்ளது. வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் தெரிவத்தாட்சி அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் செயற்படவுள்ளார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,   மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் ஜனாதிபதி தெரிவுக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.