உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை நிறுத்த உதவ வேண்டும் என, ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.
மேலும் இரண்டாம் உலகப் போர் மற்றும் கம்யூனிசத்தின் வீழ்ச்சி என, போர் தொடர்பான ஜெர்மனியின் சொந்த அனுபவங்களையும் அவர் எடுத்துரைத்தார்.
உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி இன்று ஜெர்மன் பாராளுமன்றத்தில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவரை ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்துநின்று கைதட்டி வரவேற்றனர்.
10 நிமிடங்கள் மட்டும் உரையாற்றிய அவர், தனது உரையில்,
“உக்ரைனில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதிலிருந்து 108 உக்ரைனிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஹோலோகாஸ்ட் நிகழ்வை (ஜெர்மனியில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு) அரசியல் தலைவர்கள் நினைவில் கொண்டுள்ளனர் என்றும், “இது மீண்டும் நிகழக்கூடாது” என்கின்றனர், ஆனால், இந்த வார்த்தைகள் தற்போது அர்த்தமற்றதாகிவிட்டது.
ரஷ்யாவுடனான பொருளாதார உறவை கட்டுப்படுத்த வேண்டும் என, போருக்கு முன்னதாகவே ஜெர்மனியை உக்ரைன் வலியுறுத்தி வந்தது. ஆனால், “சுதந்திரம் மற்றும் அடிமைத்தனத்திற்கு இடையில் ஒரு சுவரை எழுப்ப” ரஷ்யாவுக்கு ஜெர்மனி உதவியது. அந்த சுவரை தகர்த்திடுங்கள்” என்றார்.