Home உலகச் செய்திகள் உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியது ரஷ்யா

உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியது ரஷ்யா

உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியது ரஷ்யா

உக்ரைன் மீது படையெடுப்பைத் தொடங்கியது ரஷ்யா: உக்ரைனில் இராணுவ கட்டமைப்பு மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவுகள் மீது ரஷ்யா முதலில் தாக்குதலை தொடங்கியதாக,  உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பின்னர், ரஷ்ய இராணுவ வாகனங்கள் வடக்கில் கார்கிஃப்பிலும், கிழக்கில் லுஹான்ஸ்க்கிலும், தெற்கில் ரஷ்யா கைப்பற்றிய கிரைமியாவிலும், பெலாரூஸிலும் எல்லையை தாண்டியதாக, உக்ரைன் படைகள் தெரிவித்துள்ளன.

கீஃப்-ல் உள்ள போரிஸ்பில் சர்வதேச விமானநிலையம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்த விமான தளங்களுள் ஒன்று எனவும், கீஃப்,ட்னிப்ரோ, கார்கிஃப், மரியுபோல் ஆகிய பெருநகரங்களில் உள்ள இராணுவ தலைமையகங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றிலும் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக, உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் 2,00,000 படைவீரர்கள், போர் வாகனங்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது என, ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

கார்கிஃப் அருகே உள்ள இராணுவ விமான நிலையமும் ரஷ்யாவின் இலக்குக்கு உள்ளானதாக, உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களை கொல்லும் முன்தயாரிப்புடன் கூடிய போரை ரஷ்ய அதிபர் புதின் தேர்ந்தெடுத்துள்ளதாக, பைடன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம், ஐநா, நேட்டோ ஆகியவற்றின் தலைவர்களும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version