புதினை கொல்ல உக்ரைன் முயற்சிப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையான கிரெம்ளினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) வீழ்த்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் மூலம் தங்களுடைய அதிபர் விளாதிமிர் புதினை கொல்ல உக்ரைன் முயற்சித்ததாக கிரெம்ளின் குற்றம்சாட்டியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத காணொளி காட்சியொன்றில் கிரெம்ளினுக்கு மேலே ஒரு பொருள் அது வீழ்த்தப்படும் முன்பாக பறப்பதை காண முடிகிறது.

இந்நிலையில், இந்த  தாக்குதலுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உக்ரைன்  தெரிவித்துள்ளது.

மின்னணு ரேடார் தளவாடத்தை பயன்படுத்தி இந்த இரண்டு  ஆளில்லா விமானங்களும் முடக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது அதிபர் புதின் கிரெம்ளினில் இல்லை என்று அவரது செய்தித் தொடர்பாளர் கூறினார்.