வங்கதேசத்திலிருந்து படகு வழியாக மலேசியா செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள்:  பலி எண்ணிக்கை அதிகரிப்பு 

வங்கதேசத்திலிருந்து சுமார் 65 ரோஹிங்கியா அகதிகளுடன் மலேசியாவுக்கு சென்ற படகு மோசமான வானிலை காரணமாக விபத்துக்கு உள்ளானது. முன்னதாக 3 ஆக இருந்த பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் சுமார் 20 அகதிகளை காணவில்லை எனக் கூறப்படுகிறது. 

“இதுவரை 41 ரோஹிங்கியா அகதிகள், 4 வங்கதேசிகள் உள்பட 45 பேர் மீட்கப்பட்டுள்ளனர்,” என வங்கதேச கடலோர காவல் படை தளபதி ஆசிக் அகமது கூறியிருக்கிறார்.

வங்கதேச முகாம்களில் நிலவும் மோசமான சூழல் காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் ஆட்கடத்தல்காரர்களிடம் பணம் செலுத்தி மலேசியாவுக்கு செல்ல முயன்று வருகின்றனர்.

இந்த குறிப்பிட்ட படகு வங்கதேசத்தில் உள்ள பல கடலோரப் பகுதிகளில் அகதிகளை ஏற்றுக்கொண்டு மலேசியாவை நோக்கி புறப்பட்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 4ம் திகதி வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இப்படகு விபத்தில் சிக்கியிருக்கிறது.

“பெரும் அலைகளுடன் கடல் மிகவும் ஆக்ரோசமாக இருந்தது. ஒரு கட்டத்தில் படகு மூழ்க தொடங்கிவிட்டது. சுமார் ஒரு மணி நேரம் நீந்தி கரையை அடைந்தோம்,” எனத் தெரிவித்திருக்கிறார் பியாரா காட்யூன் எனும் ரோஹிங்கியா பெண்.