வங்கதேசத்திலிருந்து இந்தோனேசியாவுக்கு படகு மூலம் செல்ல முயன்ற ரோஹிங்கியா அகதிகள்

வங்கதேச அகதி முகாம்களிலிருந்து வெளியேறி இந்தோனேசியாவில் தஞ்சமடையும் எண்ணத்துடன் இரண்டு வாரங்களுக்கு முன் படகு வழியாக 69 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வெளியேறியிருக்கின்றனர். இந்த சூழலில் கடலில் நிலவிய மோசமான வானிலைக் காரணமாக அவர்கள் இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். 

‘மா-பாபர்-டோ’(பெற்றோரின் ஆசிர்வாதங்கள்) என பெயரிடப்பட்ட அப்படகு கடந்த பிப்ரவரி 13 அன்று கார் நிக்கோபார் பகுதியை அடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதில் 19 ஆண்கள், 22 பெண்கள், 28 குழந்தைகள் இப்படகில் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இப்படகில் போதிய எரிப்பொருள் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக இந்திய உள்துறைக்கும் வெளியுறவுத்துறைக்கும் தகவல் பகிரப்பட்டுள்ளதாக அந்தமான அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அப்படகில் உள்ள உள்ளவர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் உணவு, தண்ணீர், மருந்துப் பொருட்களை வழங்கியிருக்கின்றனர்.

கடந்த ஜனவரி 2020ம் ஆண்டு 66 ரோஹிங்கியா அகதிகளுடன் பயணித்த படகு ஒன்று டர்முக்லி எனும் அந்தமான் தீவு அருகே இடைமறிக்கப்பட்டது. இப்பகுதி வெளியுலகுடன் தொடர்பின்றி வாழ்ந்து வரும் சென்டினல் பழங்குடி மக்கள் வசிக்கும் வடக்கு சென்டினல் தீவிலிருந்து 34 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.