அரிசி விலையும் அதிகரிக்கும் அபாயம்- கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு கோரிக்கை

அரிசி விலையும் அதிகரிக்கும் அபாயம்

அரிசி விலையும் அதிகரிக்கும் அபாயம்

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக சரிவடைந்து வரும் நிலையில் அரிசி விலை எதிர்வரும் நாட்களில் 200 ரூபா என்ற எல்லையை கடந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் அரிசி விலையை கட்டுப்படுத்த, அரிசிக்காக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்துவரும் சில வாரங்களில், ஒரு கிலோகிராம் அரிசியின் விலை, 200 ரூபா என்ற எல்லையைக் கடக்கும் என சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாரியளவான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி உற்பத்தியாளர்களுக்கு சாதகமான வகையில் அரசாங்கம் செயற்படுகின்ற காரணத்தினால், இந்த நிலை ஏற்படுவதாக அந்தச் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதேநேரம், தற்போதைய நிலையில், அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் நெருக்கடியால், அதிகரிக்கும் அரிசி விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை, அரிசியை பொதி செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் பையின் விலையை, 35 ரூபாவினால் அதிகரிக்க அதனுடன் தொடர்புடைய உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி மற்றும் உக்ரைன் – ரஷ்ய போர் என்பன காரணமாக, மூலப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Tamil News