இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்க நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

இயற்கை விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும், செயற்பாடாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார இடரை சிறிதளவேனும் குறைக்கும் நோக்குடனும் நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் 50 வது மாதாந்த சபை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் போது குறித்த தீர்மானத்தினை சபை உறுப்பினர் சி. கௌசலா முன் வைத்தார். அதனை சபை உறுப்பினர்களின் வரவேற்போடு ஏக மனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் போது,  “நாட்டில் தற்போதைய பொருளாதார இடரை கருத்தில் கொண்டும் நஞ்சற்ற காய்கறி உற்பத்தியினூடாக சுய பொருளாதாரத்தை அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குதல் எனும்  நோக்கில் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட  இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ள வீட்டு தோட்ட ஆர்வலர்களுக்கு தானிய விதைகள், நாற்றுகள் அதனோடிணைந்த பொருட்களை இலவசமாக வழங்கி வைக்க வேண்டுமெனவும்,  இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் பசளையையும் வழங்க வேண்டும்” என உறுப்பினரால்  கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் அதிகார பூர்வமான விபரங்களை உள்ளடக்கிய பத்திரிகை விளம்பரம்  விரைவில் வெளியிடப்படும் என சபை அறிவித்துள்ளது.

Tamil News