ஆசிரியர், அதிபர்கள் போராட்டத்தின்போது மயங்கி வீழ்ந்து உயிரிழந்த ஆசிரியைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிடுமாறும் அஞ்சலி செலுத்துமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தவராஜா கோகுலரமணன் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர்,அதிபர்கள் போராட்டத்தின்போது மயங்கிவீழ்ந்து உயிரிழந்த தெனியாய மத்திய கல்லூரி ஆரம்பபிரிவு ஆசிரியை ஏ.டி.வருணி அசங்கவுக்கு மட்டக்களப்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தவராஜா கோகுலரமணன்,
“அதிபர்,ஆசிரியர்களின் 24வருட சம்பள முரண்பாட்டினை நீக்கும் வகையில் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆசிரியர்கள்,அதிபர்கள் ஒன்றிணைந்த வகையில் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றோம்.
அதனடிப்படையில் அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.
வழமையான வரவு செலவுத்திட்டத்தினை விட 30ஆயிரம் மில்லியனை மேலதிகமாக அரசாங்கம் ஒதுக்கீடுசெய்துள்ளது.இருந்தபோதிலும் மீதியான இரு மடங்கினையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
இதுவரையில் அதிபர்கள்,ஆசிரியர்கள் எங்களது போராட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினார்களோ அதேபோன்று எதிர்காலத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாத சந்தர்ப்பத்தில் எங்களோடு கைகோர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த ஆசிரிய போராட்டத்தில் கலந்துகொண்டு தனது உயிரை தியாகம் செய்த வருணி ஆசிரியை அவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் வரும் திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் வெள்ளைக்கொடிகளை பறக்கவிடுமாறும் ஒன்றுகூடலின்போது ஐந்து நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.