பிள்ளையார் சிலை அகற்றம்- ஊடகவியலாளர் கார்த்திபன் கண்டனம்

பிள்ளையார் சிலை அகற்றம்பிள்ளையாரை அகற்றிவிட்டு, அந்தோனியாரை பிரதிஷ்டை செய்தது மர்ம நபர்களின் கேவலமான செயல் என்றும் பிள்ளையார் சிலை அகற்றம் தொடர்பாக இதன் உண்மை நிலை என்ன என்று அறிய முடியாமல் உள்ளது. எனினும் இப்படி ஒரு சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். மதம் பிடித்த மதவாதிகளின் இந்த செயலை வண்மையாக கண்டிக்கின்றேன் என வவுனியா ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மடு , பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர் தூரத்திலிருந்த பிள்ளையார் சிலை ஒன்று மாயமாகியுள்ளதுடன், அதே தினத்தில் குறித்த இடத்தில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்திபன் மேலும் தெரிவிக்கையில்,

“நானும் ஒரு கிறிஸ்தவன் தான் ஆனாலும் ஒன்றை எம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 1505 ம் ஆண்டு இலங்கைக்கு போர்த்துக்கீசர் வருகை தராமல் இருந்திருந்தால் இன்று நாம் எல்லோரும் நெற்றியில் விபூதியும் கழுத்தில் உருத்திராட்ச மாலையுடன் தான் இருந்திருப்போம் என்பதை மறந்து விடாதீர்கள்.

வேதாகமத்திலோ அல்லது இயேசு நாதரோ எங்கும் கூறவில்லை, பிரிதொரு மதத்தை இழிவு படுத்த சொல்லி.  ஏன் இயேசு நாதர் கூட தன்னை வணங்குங்கள் என்று கூட கூறியது இல்லை. தன்னை பின்பற்றுங்கள் என்பதை தான் கூறியுள்ளார். ஆனால் இங்கிருக்கும் சில விஷ கிருமிகள் (இரு மதத்திலும்) தமிழர் இடையில் பிரச்சினைகளை உண்டு செய்து அதில் குளிர்காய நினைத்து ஒரு இனத்துக்குள் இரு பிரிவை உருவாக்குகிறார்கள்.

பிள்ளையார் சிலை அகற்றம்

கடந்த கால எமது ஈழ வரலாற்றை பார்த்தால் யாரும் எப்பொழுதும் இப்படியான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டதில்லை. விமானத்தில் குண்டு போடும் போது கிறிஸ்தவ கோவில்களுக்குள்ளும், சைவ கோவில்களுக்குள்ளும் ஓடி மறைந்து உயிரை காப்பாற்றிக்கொண்ட வரலாறுகளை மறக்க வேண்டாம். அப்பொழுதெல்லாம் நீ கிறிஸ்தவன். நான் சைவர் என்று கூறி யாரும் அந்த கோவில்களுக்குள் தஞ்சம் புகாமல் இருந்தீர்களா..?

இன்று அப்படி ஒரு பிரச்சினை இல்லை என்றதும் புது பிரச்சினையை உருவாக்குகிறார்கள். தமிழன் ஒற்றுமையாக இருந்தால் உலகை ஆழ்வான் என்ற அச்சத்தில் சில அந்நிய சக்திகளின் தூண்டுதல்களுக்குள் சிக்குண்டு இனத்தை அடியோடு அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.

இன்று மதத்திற்காக தம் இனத்தையே காட்டிக்கொடுக்கும் நிலமைக்கு எம்முள் சிலர் உருவாக்கப்பட்டுள்ளார்கள் என்பது தான் முற்றிலும் உண்மை.

தயவுசெய்து இது போன்ற மாய வலைக்குள் வீழ்ந்து எம் இனத்துக்குள் பிரச்சினைகளை உருவாக்காமல் வாழ பழகிகொள்வோம். இல்லையேல் நீங்கள் வணங்கும் அந்த தெய்வத்தால் கூட நம்மை காப்பாற்ற முடியாது.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021