நெருக்கடியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அமைதியளிக்க மதநல்லுறவு உடன் தேவை- காங்கேயன்

அமைதியையும், பாலினச் சமத்துவத்தையும், உளநலத்தையும், நல்வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பேணுவதற்கான ஐ.நா.வின் மதநல்லிணக்க வாரம் மார்ச் 01 முதல் 07வரை ஐக்கியநாடுகள் சபையின் மதநல்லிணக்க வாரம் மார்ச் 01 முதல் 07வரை இடம்nபுற்று வருகிறது.

2010ம் ஆண்டு யோர்தானின் மன்னர் 2வது அப்துல்லா அவர்களின் முன்மொழிவில் வன்முறையற்ற அமைதிப்பண்பாட்டை அகிலமெங்கும் வளர்த்தெடுக்க மதநல்லிணக்கம் வளர்க்கப்பட வேண்டுமென கோரப்பட்டதை ஏற்று ஐக்கியநாடுகள் சபை 2012இல் மதநல்லிணக்க வாரத்தை மார்ச் 01முதல் 07 வரை ‘ புலம்பெயர்ந்தோர் நேர்மாற்றங்களுக்கான போராற்றல்’ என்ற மையக்கருவில் கொண்டாடத் தொடங்கியது. அடுத்த ஆண்டான 2013இல் மனிதப் புலப்பெயர்வு அமைதிக்கான இயற்கையான முறைமையாகக் கூட உள்ளது என்ற உண்மை வளர்க்கப்பட்டது.

2014 இல் பொறுமையும் புனர்வாழ்வு அளித்தலும் மன்னித்தலும் மதநல்லிணக்கத்தின் வழி வளர்க்கப்பட வேண்டும் என்கின்ற தென்னாபிரிக்க அரசியல் அனுபவத்ததை முன்னிலைப்படுத்தி ‘மதநல்லிணக்கம்’ முரண்பாடுகளிலும் போர்களிலும் அவற்றின் விளைவுகளிலும் மனிதாயத்தை மீள்விக்கும் ஆற்றலாக வளர்க்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.

2015இல் மதநல்லிணக்கக் கூட்டுச் செபித்தலும், சுகமளிக்க இறையருள் வேண்டும் வழிபாடுகளும், சமுகசேவைகளுடன் இணைக்கப்பட்டு அமைதியை நிலைப்படுத்துவதற்கான காரணிகளாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் முன்னிலைப்படுத்தப்பட்டது. 2016இல் எல்லகைளைக் கடக்கும் பாலமாக மதநல்லிணக்கம் நடைமுறை வாழ்வில் ஊக்குவிக்கப்படுதல் வலியுறுத்தப்பட்டது.

2019இல் நிலையான வளர்ச்சிகள் நல்லிணக்க அமைதி வழி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் முன்வைக்கப்பட்டது. 2019 இல் போர்கள் முரண்பாடுகளின் தழும்புகளின் அடிப்படையிலும் பெருந்தொற்றின் அனுபவத்திலும் நம்பிக்கையும் ஆன்மிக தலைமைத்துவ இணைப்பும் மதநல்லிணக்கத்தால் வளர்க்கப்பட வேண்டும் என்பது சமகாலத்தின் தேவையாக வலியுறுத்தப்பட்டது.

இந்த மதநல்லிணக்கத்தின் வழி மானிடத்தை மனிதத்துவத்தைப் பேணுதல் என்ற உயர் நோக்காக மட்டுமல்ல மனித சமுதாயம் தப்பிப்பிழைப்பதற்கான பொறிமுறையாகவும் 2023 ம் ஆண்டான இவ்வாண்டுக்கான மைய நோக்காக அமைதியையும், பாலினச் சமத்துவத்தையும், உளநலத்தையும், நல்வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பேணுவதற்கான மதநல்லிணக்கம் என்பது ஐக்கிய நாடுகள் சபையினால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

7 மில்லியன் மக்களின் உயிரைக் காவு கொண்ட கோவிட் பெருந்தொற்று இன்று மக்களிடை என்றும் தொடரக்கூடிய தொற்று என்று மீள்வரைவு செய்யப்பட்டு வழமையான வைரஸ் தொற்றுக் காய்ச்சல்களை எதிர்கொள்ளும் முறையிலேயே கோவிட் பெருந்தொற்றும் இன்று மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் மட்டுப்படுத்தப்பட்டாலும், உலகெங்கும் கோவிட் பெருந்தொற்று நெருக்கடி ஏற்படுத்திய உடல் உளவியல் தாக்கங்களின் தொடர்ச்சிகளால் உலகின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிகத் தளங்கள் ஆட்டம் கண்டுபோய் உள்ளன.

இந்நேரத்தில் தான் மதங்கள் தரும் ஆன்மிகப் பலமும் மதநம்பிக்கை தரும் நல்லுறவுச் செயல்களும் மனித சமுதாயத்தின் ஒருங்கிணைப்புக்கும் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கும் அவசியமாக உள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தக் கூடிய முறையில் உலக வங்கியின் தரவின் படி 2022இல் அதீத வறுமை நிலையில் உலகின் மக்கள் தொகையில் 8.5மூ மான 685 மில்லியன் மக்கள் இருந்துள்ளனர். இவர்களுள் 5.7 மில்லியன் சிறுவர்களும் அடங்குவர். ‘கடவுளை அன்பு செய்தல் என்பது அயலவரை அன்பு செய்தலில் தங்கியுள்ளது’ என்ற விருதுவாக்கியத்துடன் மதங்களின் நல்லிணக்க அமைப்பினர் இவ்வாண்டில் அமைதியையும், பாலினச் சமத்துவத்தையும், உளநலத்தையும், நல்வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பேணுவதற்கான முயற்சிகளை மதநல்லிணக்கத்தின் வழி மேற்கொள்ள முனைந்து வருகின்றனர்.

உலகின் இந்த சமகாலநிலைக்கு ஈழத்தமிழ் மக்களும் மாறுபட்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களை வேறுபடுத்தித் தனிமைப்படுத்தி அவர்களின் இறைமையை இழக்க வைக்க இனஅழிப்பு, இனத்துடைப்பு, பண்பாட்டு இனஅழிப்பு என்னும் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான மூன்று மனிதக் கொடுமைகளையும் சிறிலங்காவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதற்கான தேசிய பாதுகாப்பு நடவடிக்கை என உலகுக்கு நியாயப்படுத்தி வேகமாக ஈழத்தமிழின அழிப்பை பலநிலைகளில் முன்னெடுத்து வரும் சிறிலங்கா அரசின் இன்றைய அரசத்தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தனது மௌனத்தால் வெளிப்படையாக அரசாங்கத்திற்குக் காலக்கெடு கொடுக்கும் அளவுக்கு பௌத்த மகாநாயக்க பீடங்களின் அரசியல் அமுக்கக் குழுக்கள் மதவெறியுடன் வீறு கொண்டெழ உதவிவருகின்றார்.

ஈழத்தமிழர்களிடை திடீரென தோன்றியுள்ள முன்னாள் அறவழிப்போராட்ட முன்னெடுப்பாளரான ஈழத்தமிழர் ஒருவர் தலைமையில் வன்முறைப் போக்குகளுடன் வேகமாக வளர்க்கப்பெற்று வரும் இந்நுத்துவா அமுக்கக் குழுக்களும் தமக்குள் பௌத்த -இந்து மதங்கள் இணைந்து வளர்க்கப்பட்டு மற்றைய மதங்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்னும் புதிய அரசியல் சிந்தனைகளுடன், தமிழரிடை இந்து கிறிஸ்தவ மதங்களுக்கு இடை மதநல்லிணக்கத்தைத் தகர்த்து மதவெறியினை அரசியல் ஆதாயங்களுக்காக நாளாந்த வாழ்வியலாக வளர்த்து வருகின்றார். இவரின் வழிகாட்டலில் வவனியாவில் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சிச் சுரூபங்களை உடைத்து நாசப்படுத்தியதிலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி தேர்தலில் கிறிஸ்தவத்துறைத் தலைவராக உள்ள குரு ஒருவர் தெரிவாவதைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கில் அவர் போட்டியில் இருந்து விலகுமாறு கொடுக்கப்பட்ட இந்துத்துவ பல்கலைக்கழகச் சமுகத்தவரின் அழுத்தங்களில் அவர் போட்டியில் நி;னறு விலகிய நிகழ்வு மதநல்லிணக்கவாரமான இவ் மார்ச் முதல் வாரத்திலேயே தெரியவந்துள்ளது.

இது இந்து கிறிஸ்தவ முரண்பாடுகள் எந்த அளவுக்கு இலங்கைத் தீவில் வளர்க்கப்பட்டு வருகின்றன என்பதை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே 2023ம் ஆண்டு மதநல்லிணக்க வாரம் ஈழத்தில் இடம்பெறுகிறது. இதனை இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதநிதியும், தூதரங்களும் கவனத்தில் எடுக்காது விட்டால் ஈழத்தின் கடடன் சீரமைப்பு முயற்சிகள் என்பது நடைமுறைச்சாத்தியமற்றதாகும். அனைத்துலக நாணயநிதியத்தின் கடனுதவியும் மதவெறியை வளர்க்கவே பயன்படுத்தப்படும்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தை கடந்த 75 ஆண்டுகால சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியில் தங்கள் மேலான சிறிலங்காவின் இனஅழிப்புக்கான ஊக்கியாக அனுபவித்து வரும் ஈழத்தமிழர்களிடை சைவ கிறிஸ்தவ இஸ்லாமிய பௌத்த நல்லிணக்கம் என்பது நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான முன்நிபந்தனையாக உள்ளது. இதனை முன்னெடுக்க மதவெறி கடந்த மதநல்லிணக்கத் தலைமை என்பது நான்கு மதங்களுக்குமே சமகாலத்தின் தேவையாக உள்ளது.

இதற்கு இந்த நான்கு மதங்களைச் சேர்ந்த மதத்தலைமைகளின் கூட்டிணைவான மதநல்லிணக்க சபைகள் நிறுவப்பட வேண்டும். இதற்கான முன்ஏற்பாடுகளை இலங்கைக்கு வெளியே உள்ள நான்கு மதங்களின் இறைபற்றாளர்களும் முன்னெடுப்பது அவசியமாகிறது. இதற்கு முன்னோடியாக மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களை மதங்களையோ அல்லது மதநம்பிக்கையாளர்களையோ உண்மைக்கு மாறான பேச்சுகக்ளால் ஊகங்களால் துன்புறுத்தும் மதவெறிப் பரப்புரைகளிளிலிருந்து சட்டத்தின் மூலம் பாதுகாப்பு பெற அரசாங்கம் நடுநிலையான நீதிபெறு முறைமைகளை அறிவிக்க வேண்டும்.

சைவமக்களின் ஆலயங்களிலோ கிறிஸ்தவ ஆலயங்களிலோ பள்ளிவாசல்களிலோ பௌத்த விகாரைகளிலோ அவற்றின் சொத்துக்களுக்கு சட்டத்திற்கு அப்பாற்றபட்ட முறையில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் அனைத்திலும் இருந்து உடன் மக்கள் பாதுகாப்புப் பெறுவதற்கான திட்டமிட்ட ஒழுங்குமுறைகள் அறிவிக்கப்படல் வேண்டும். மதத்தினைச் சுட்டி ஒருவரின் கல்வி வேலைவாய்ப்பு வர்த்தக உயர்வுகளை மறற்வர் தடுக்கும் மதவெறி வாழ்வியல் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தமிழருக்கு அமைதியும் பாதுகாப்பும் அளிக்கும் பெரும் பொறுப்பு மதநல்லிணக்கத்தின் மூலம் நான்கு மதத்தினராலும் முன்னெடுக்கப்படல் உடன் தேவையாக உள்ளது.

அதே போல சிங்கள ஈழத்தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் வழிபாட்டுரிமைகளும் வழிபாட்டுச் சொத்துக்களைப் பேணும் உரிமைகளும் உலக நாடுகளாலும் உலக அமைப்புக்களாலும் காலத்துக்குக் காலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பான அமைதியில் இலங்கைத் தீவின் ஒவ்வொரு குடியும் வாழ அனைத்து வழிமுறைகளையும் அனைத்துலகச் சட்டங்களுக்கு ஏற்ப தாமதியாது செயற்படுத்த வேண்டும். அப்போது தான் ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மைய நோக்காக அமைதியையும், பாலினச் சமத்துவத்தையும், உளநலத்தையும், நல்வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பேணுவதற்கான மதநல்லிணக்கம் இலங்கைத் தீவில் நடைமுறைப் பயன் உள்ளதாகும்.