காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.01) காலை இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “ நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை, கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும், செயல் திறன அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது  காவல்துறையினர்  அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பகுதியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

Tamil News