யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், வரவேண்டும் வரவேண்டும் ஐ.நா அமைதிப்படை வரவேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு, சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா?, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே? உள்ளிட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.