ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு

ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.  

முல்லைத்தீவு மாவட்ட  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில்  நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

இன்று 1718 ஆவது நாளாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நேரத்திலே நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களுக்கும் சர்வதேசத்துக்கும் அவசரமும் அவசியமானதுமான ஒரு தகவலை தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அதாவது ஓ எம் பி அலுவலகத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத அலுவலகம் எங்களை பதிவு செய்ததாக கூறி, அதாவது காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தகவல் அடிப்படையில் தங்களுக்கு மிகுதி தகவல்களையும் வழங்குமாறு காணாமல் போன உறவுகளுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த ஓ எம் பி அலுவலகத்திலே எந்த ஒரு தகவலையும் பதிவு செய்யவில்லை.  ஒரு பொய்யான  தகவலை வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து தகவலை பெற்று எமக்கான மரணச்சான்றிதழ் இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் செய்வதற்கு முனைகின்றனர்.

இதில் மக்கள் மிகவும் அக்கறையாக இருக்க வேண்டும்.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் இந்த முறைப்பாடுகளை செய்யவில்லை.

நாங்கள் இதில் கவனமாக இருப்பதோடு ஓ எம் பி அலுவலகத்திடம் நாங்கள் பலதடவைகள் கூறினோம். இந்த அலுவலகம் எங்களுக்கு தேவையில்லை. நீங்கள் எந்த பதிவுகளையும் செய்ய வேண்டாம் என்று. இருப்பினும் அவர்கள் காணாமல் போனவருடைய   புகைப்படம்,   அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சகல தகவல்களையும் கோருகின்றனர். ஆனால் நாம் கொடுக்கப்போவதில்லை.

எனவே நாங்கள் இப்போதும் ஆணித்தரமாக கூறுகிறோம் எமக்கு இந்த ஓ எம் பி அலுவலகம் தேவையில்லை. ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருக்கிறார் காணாமல் போனோருக்கு தான் மரணச்சான்றிதழ் வழங்க தயாராகவுள்ளதாக. இந்த நிலையில் அதை சந்தர்ப்பமாக வைத்து ஓ எம் பி அலுவலகம் பாதிக்கப்பட்ட எம்மிடமிருந்து தகவலை பெற்று எமக்கு மரணச்சான்றிதழ் தருவதற்கு முனைகின்றார்கள். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad ஓ.எம்.பி.அலுவலக செயற்பாடுகளுக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு