Tamil News
Home செய்திகள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதி மறுப்பு

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதி மறுப்பு

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், குவின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் செயல்படும் தடுப்பு முகாம்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலியாவுக்கான பயணத்தை ஐ.நா. சித்திரவதை தடுப்புக் குழு ரத்து செய்துள்ளது.  

கடந்த அக்டோபர் 2022ல் அவுஸ்திரேலியாவை பார்வையிட திட்டமிட்டிருந்த சித்திரவதை தடுப்புக்கான துணைக்குழு, முகாம்களை பார்வையிடுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அப்பயணத்தை ரத்து செய்திருந்தது. இந்த நிலையில், அம்முகாம்களைப் பார்வையிடுவதற்கான ஏற்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா. குழுவின் இப்பயணம் இரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு குறிப்பிட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்புமின்றி அவுஸ்திரேலியாவில் உள்ள சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், பிற தடுப்பு முகாம்களை ஐ.நா. குழு பார்வையிடுவதற்கான ஒப்புதலை கடந்த 2017 ல் அவுஸ்திரேலிய அரசு வழங்கியது.  இவ்வாறான இடங்களில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்திரவதை உள்ளாவதை, மோசமாக நடத்தப்படுவதை தடுக்கும் விதமாக ஐ.நா. குழுவின் ஆய்வு நடத்தப்படுகிறது.

அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பு இருந்த போதிலும், குறிப்பிட்ட இரண்டு மாநிலங்களில் உள்ள முகாம்களைப் பார்வையிடுவதற்கான தடையற்ற அனுமதிப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாததால் ஐ.நா.குழுவின் பயணத்தை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என ஐ.நா. சித்திரவதைத் தடுப்பு துணைக் குழுவின் தலைவர் சுசான் ஜாபர் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. குழுவின் இம்முடிவால் ஆஸ்திரேலிய அரசு கவலையடைந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசின் தலைமை வழக்கறிஞரான மார்க் ட்ரேஃபசின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

ஐ.நா. குழுவின் பயணம் இரத்து செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று என அவுஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையர் லோரெய்ன் ஃபின்லே குறிப்பிட்டிருக்கிறார். “இது அவுஸ்திரேலியாவின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார்  மனித உரிமைகள் ஆணையர்.

Exit mobile version