Home செய்திகள் ‘அரசு ஆபத்தில் இருக்கும் போது அரசை காப்பாற்ற ரணில் பிரதமராக மாற்றப்படுகிறார் -இம்ரான் 

‘அரசு ஆபத்தில் இருக்கும் போது அரசை காப்பாற்ற ரணில் பிரதமராக மாற்றப்படுகிறார் -இம்ரான் 

ரணில் பிரதமராக மாற்றப்படுகிறார்

‘அரசு ஆபத்தில் இருக்கும் போது அரசை காப்பாற்ற ரணில் பிரதமராக மாற்றப்படுகிறார்’ என திருமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

கடந்த புதன் கிழமை பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“தற்பொழுது அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்திருக்கிறது. இவ்வாறு அரசு பெரும்பான்மையை இழக்கும் சந்தர்ப்பங்களில் அரசுக்கு கை கொடுக்க ஊடகங்கள் மூலம் ரணில் விகாரமசிங்க பிரதமராக மாற்றப்படுவார்.தேசிய அரசாங்கம் அமையும். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து சிலர் வெளியேறுவார்கள்.  எத்தனை தடவைகள் இதை கேட்டு விட்டோம்.

அரசின் கடைசி காலத்தில் நீங்கள் தேசிய அரசாங்கம் அமைத்து கொள்ளுங்கள், தனி மொட்டு அரசாங்கம் அமைத்து கொள்ளுங்கள். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் யாரும் உங்களோடு இணைய மாட்டார்கள். மூழ்கும் கப்பலில் பயணிக்க யாரும் தயாரில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனப்படுத்த அரசு சார்பு ஊடகங்கள் மூலம் எழுதப்படும் திரைக் கதைகளுக்கு இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.

எமது கட்சி தலைமை காரியாலயம் மீது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் முட்டை  தாக்குதல் நடாத்தப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியாக பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக நாம் சரியான பாதையில் மக்களுக்காக பயணிப்பதுக்கு அரசாங்கம் வழங்கிய நற்சான்றிதழாகவே இந்த தாக்குதலை நான் பார்க்கிறேன்.

எதிர்வரும் 15 ஆம் திகதி நாம் மேற்கொள்ளவுள்ள எதிர்ப்பு நடவடிக்கைக்கு பிறகு இன்னும் எத்தனை தாக்குதல் மேற்கொள்ளப்படுமோ என தெரியவில்லை இருந்தும் எவ்வாறான அச்சுறுத்தல் வந்தாலும் மக்களுக்கான எமது போராடடத்தை இவர்களால் தடுக்க முடியாது என்பதை மட்டும் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

Exit mobile version