மட்டக்களப்பில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் அடாவடி

மட்டக்களப்பு ஆற்றுவாயை வெட்ட முனைந்த பொதுஜன பெரமுனவின் அம்பாறை வேட்பாளர் உட்பட 35 க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று மாலை மட்டக்களப்பு நகரில் வாவியினையும் கடலையும் இணைக்கும் மணல்திட்டியான ஆற்றுவாயை வெட்ட முனைந்தபோது பாலமீன்மடு மீனவர்கள் அவர்களை தடுத்துள்ளனர்.

இதன்போது அப்பகுதி மீனவர் சங்க உறுப்பினர்களுக்கும் ஆற்றுவாயை வெட்ட வந்தவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் அங்குவந்த பொலிஸார் அம்பாறையில் இருந்து ஆத்துவாயை வெட்ட வந்தவர்களை கைதுசெய்துசென்றனர்.

இதன்போது அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் சத்தியசீலன் மாநகரசபை உறுப்பினர்கள் இது தொடர்பில் அப்பகுதி மீனவர்களுடன் கலந்துரையாடியதுடன் இது குறித்து ஆற்றுவாய் வெட்ட வந்தவர்களுடன் கடுமையான வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இது தொடர்பான கூட்டம் நடைபெற்றதுடன் வாவியில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவுள்ளதனால் ஆற்றுவாய் வெட்டு நிலையில் இல்லையென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த ஆற்றுவாய் வெட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.