பெண்களிற்கான சுகாதார உரிமைகளை உறுதி செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம்

பெண்களிற்கான சுகாதார உரிமைகளை உறுதி செய்யக்கோரி வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக ஆரம்பமானது.

வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் மக்களிற்கான சுகாதார வசதிகள் குறைவாக  காணப்படுவது தொடர்பிலும், சில மருத்து பொருட்களை வெளியில் பெற்றுக்கொள்ள பணிப்பது தொடர்பிலும் அதிர்ப்தி வெளியிட்டும், சுகாதார உரிமைகளை உறுதி செய்யக்கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பெண்கள் வாழ்வுரிமைக்கழகம் எனும் அரச சார்பற்ற நிறுவனம் குறித்த போராட்டத்திற்கு அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.