கொழும்பில் போராட்டம்
அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகக் கோரி, ஜனதா விமுக்தி பெரமுனவினர் (ஜே.வி.பி) இன்று கொழும்பு ஹைலெவல் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப் போராட்டத்தின் போது சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் வீதிகள் தோறும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் தத்தளித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் வாங்குவதற்கு பல மணிநேரம் வரியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்தோடு இவ்வாறு காத்திருந்த போது உயிரிழப்புக்களையும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இலங்கையின் இந்த நிலைமைக்கு பொறுப்பேற்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலகக் கோரி கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கொழும்பில் இன்று ஜேவிபி இளைஞரணியினர் நடத்திய போராட்டத்தின் போது அதிபர் செயலகத்துக்குள் நுழைய முற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும் போராட்டத்தில் குதிப்பதாக அறிவித்துள்ளது. வரும் 25-நம் திகதி ரணில் தலைமையில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.