மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டம்- முஸ்லீம் பெண்கள் பெரும் ஆதரவு

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில்  பெரும் அளவிலான முஸ்லீம் பெண்கள் கலந்துகொண்டனர்.

தமிழரசு கட்சி வடகிழக்கு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ‘‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்”என்ற கோரிக்கையினை முன்வைத்து கையெழுத்துப்போராட்டமும் கவனயீர்ப்பு போராட்டமும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் தலைவர் கி.சேயோன் தலைமையில் நடைபெற்றது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு

வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மட்டக்களப்பு மறை.மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் இந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்-முஸ்லிம் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குமாறு முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டத்தில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இன்றைய இந்த கையெழுத்துப்பெறும் போராட்டத்தில் பெருமளவான முஸ்லிம் பெண்களும் கலந்துகொண்டு ஆதரவு வழங்கியிருந்தனர்.