இலங்கையில் மீண்டும் போராட்டம்: முன்னாள் எம்.பி ஹிரினிகா உள்ளிட்டோர் கைது

இலங்கை ஜனாதிபதி மாளிகை எதிரில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரினிகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகி, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து, சற்று குறைந்திருந்த போராட்டங்கள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி மாளிகை முன்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிர்னிகா பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் இன்று போராட்டம் நடத்தினர். இதில் ஹிர்னிகா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கு திரண்டு, அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டு, நீர்த்தாரை பிரயோகம் செய்யப்பட்டது. இதனால், அப்பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.