கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை

மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை

இலங்கையின் அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய தரம் 06 இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 06 இஸ்லாம் (தமிழ் மொழி), தரம் 07 இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10 இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 10  இஸ்லாம்(தமிழ் மொழி), தரம் 11  இஸ்லாம் (தமிழ் மொழி) ஆகிய புத்தங்களையே மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என  கல்வி வெளியீட்டுத் திணைக்கம் உத்தரவிட்டுள்ளது.

பாடசாலை அதிபர்களுக்கு, கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அயிலப்பெரும அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுக்கு அமைவாகவே, மேற்படி புத்தகங்களின் விநியோகத்தினை நிறுத்துமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக தேசிய பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்சொல்லப்பட்ட பாடநூல்களை விநியோகிக்க வேண்டாமென, தாம் யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்றும் அவ்வாறு வெளியாகியுள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் உறுப்பினர் அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு – கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில், ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியை அண்மையில் ஜனாதிபதி நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி

Tamil News