திலீபன் நினைவேந்தல் :5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு தடையுத்தரவு வழங்கிய காவல்துறையினர்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்தவருக்கு தடையுத்தரவுடன் சென்ற  காவல்துறை- மகன் கொடுத்த பதிலடி! - ஐபிசி தமிழ்

தியாக தீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு காவல்துறையினர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு காவதுறைப் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளார்கள் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு  காவல்துறையினர்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குப்  பதிவுசெய்திருந்தனர்.

அதனடிப்படையில் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த கட்டளையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,5 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, ஆகியோருக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளை காவல்துறையினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள்   இன்று, ஐந்து வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் அவர்களுடைய இல்லத்துக்கு எடுத்து சென்று அவருடைய மகன் பீற்றர் இளஞ்செழியனிடம் வழங்கியபோது, அதில் தன்னுடைய பெயர் இல்லை எனவும் பெயர் குறிப்பிடப்பட்டவருக்கு வழங்குவதாக இருந்தால் முல்லைத்தீவு உண்ணாப்புலவு சேமக்காலையில் கொண்டு சென்று வழங்குமாறும் கூறி  காவல்துறையினரை திரும்பி அனுப்பியுள்ளார்.