பிரித்தானிய சுற்றுலாப் பயணியை இலங்கையிலிருந்து வெளியேற்ற ஜனாதிபதி உத்தரவு

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தள பிரசாரங்கள் மூலம் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய சுற்றுலாப் பயணியை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளார்.

ஓகஸ்ட் 2 ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கெய்லி பிரேசரின் இல்லத்திற்கு சென்ற குடிவரவு அதிகாரிகள் குழுவொன்ரூ அவரது பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு  அறிவுறுத்தியது . குடிவரவு அதிகாரிகள் அவரது இல்லத்தில் விசாரணை நடத்துவது வீடியோவாக எடுக்கப்பட்டு பல தளங்களில் வைரலாகி, காலி முகத்திடலில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதற்காக ஒரு சுற்றுலாப் பயணியை அரச அதிகாரிகள் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்று சர்ச்சையை உருவாக்கியது.

இந்நிலையில்,குறித்த சுற்றுலாப்பயணி தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரை  நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக தமக்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும்  காவல்துறையினரையும்  கோரியுள்ளது.