Home செய்திகள் கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதி – காணாமல் போனவர்களின் உறவுகள் கொந்தளிப்பு

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதி – காணாமல் போனவர்களின் உறவுகள் கொந்தளிப்பு

IMG 20220211 WA0057 கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதி - காணாமல் போனவர்களின் உறவுகள் கொந்தளிப்பு

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை காவல்துறை தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. 

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைகழகத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவ சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது.

எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று காவல்துறையினருக்கு பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காறர்கள் தெரிவித்தபோதும் அதனை பொருட்படுத்தாத காவல்துறையினருக்கு  அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன் கொலை குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர்.

இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் காவல்துறையினருக்கு மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக நின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் திரும்பி சென்றனர்.

Exit mobile version