Home செய்திகள் கிளாஸ்கோ நகரத்தை அடைந்தார் ஜனாதிபதி கோட்டாபய

கிளாஸ்கோ நகரத்தை அடைந்தார் ஜனாதிபதி கோட்டாபய

கிளாஸ்கோ நகரத்தை அடைந்தார்
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் நோக்கிப் புறப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தை அடைந்தார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், அந்நாட்டு நேரப்படி நேற்று பிற்பகல் 12.40 மணிக்கு கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில், பிரிட்டனுக்கான இலங்கை தூதுவர் சரோஜா சிறிசேன அம்மையார், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வரவேற்றார்.

காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு இன்று தொடக்கம் நவம்பர் 12 ஆம் திகதி வரை, கிளாஸ்கோ நகரில் நடைபெறும். நவம்பர் 01 மற்றும் 02ஆம் திகதிகள், உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” என்று நடைபெறும் இம்மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் இருபத்தையாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். பிரிட்டனில் இடம்பெற்ற மாநாடுகளில், இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, சூரியசக்தி, காற்று மற்றும் நீர்மின்சார உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும், ஜனாதிபதியுடன் இவ்விஜயத்தில் இணைந்துள்ளனர்.

Exit mobile version