ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் – நீதித்துறை, மருத்துவதுறை, தொழில்வல்லுனர்கள் கூட்டாக வேண்டுகோள்

ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என இலங்கையின் நீதித்துறை மருத்துவதுறை தொழில் வல்லுநர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்

அவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

நீதித்துறை மற்றும் மருத்துவதுறையை சேர்ந்த கரிசனை மிக்க தொழில்வல்லுநர்கள் – நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கைகக்கான திசை-தேசத்திற்கான சுயாதீன தொழில் வல்லுநர்கள் என்ற அமைப்பின் கீழ் ஒன்றுகூடினர்.

பின்வரும் விடயங்கள் குறித்து நீண்டநேரம் விவாதிக்கப்பட்டது.

அனைத்து இலங்கையர்களும் எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார சமூக துயரங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் முன்வைக்கப்படும் வேண்டுகோள்களிற்கான காரணம்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக சட்டமொழுங்கு முற்றாக சிதைவடையக்கூடிய சூழ்நிலை அதன் காரணமாக நாட்டில் குழப்பநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு

இலங்கையின் அரசமைப்பு கட்டமைப்பிற்குள்ளும் சட்டத்திற்குள்ளும் இந்த பாரதூரமான நிலைமைக்கு தீர்வை காண்பதற்காக எடுக்கப்படவேண்டிய உடனடி நடவடிக்கைகள்

குழுவினர் பின்வரும் தீர்மானத்திற்கு வந்தனர்.

பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும்.

1

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும்( சபாநாயகருக்கான அறிவித்தல் மூலம் ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு அரசமைப்பின் 38 (1 )(b)பிரிவுஇடமளிக்கின்றது )

2

புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படவேண்டும்( முடிவடையாத பதவிக்காலத்திற்காக நாடாளுமன்றத்தை சேர்ந்த ஒருவரை தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்திற்கு அரசமைப்பு இடமளித்துள்ளது. 40 – (1) (a)

3

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதும் பிரதமர் பதவி விலகவேண்டும்.( சபாநாயகருக்கான அறிவித்தல் மூலம் பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு அரசமைப்பின் பிரிவு இடமளிக்கின்றது. பிரதமர் பதவி விலகியதும் அமைச்சரவை கலைக்கப்பட்டதாக கருதப்படும்)

4

புதிய பிரதமரின் தலைமையில் 18 முக்கிய அமைச்சுகளிற்கான அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களை உள்ளடக்கிய இடைக்கால – காபந்து அரசாங்கம் பதவியேற்கவேண்டும்.

– ஒரு வருடத்திற்கு செயற்படலாம்.

இடைக்கால அமைச்சரவையில் இடம்பெறுகின்ற நபர்கள் குறிப்பிட்ட அமைச்சரவை பொறுப்புகளை ஏற்பதற்கான உரிய கல்விதகுதிகள் -விசேட திறமைகள் கொண்டவர்களாக காணப்படவேண்டும்,அவர்கள் அதிஉயர் நேர்மை கொண்டவர்களாக விளங்கவேண்டும்.

இடைக்கால அரசாங்கத்தில் தொழில்சார் வல்லுனர்கள்- மிக நேர்மையான நிபுணர்கள் அங்கம் வகிப்பதற்கு எற்ற விதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும்.

காபந்து இடைக்கால அரசாங்கத்தின் காலத்தில் முன்னுரிமைக்குரிய நடவடிக்கையாக 20வது திருத்தத்தை கைவிடுவதற்கும் உரிய மாற்றங்களுடன் 19 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்குமான முயற்சிகள் இடம்பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News