நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் –  அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

நிபந்தனையின்றி அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என   அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல்  கைதிகளின் தற்போதைய நிலைமை  தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,

“இரத்னபுரி மேல் நீதிமன்றில் 2020.7.31 திகதி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரேமலால் ஜயசேகர உட்பட மூவர்  2022.3.31 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் குற்றவாளிகள் இல்லையென குற்றங்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர் இன்னொரு நீதிமன்றில் குற்றமற்றவர் என முடிவு செய்வது விசித்திரமாய் உள்ளது. இது சட்டங்களில் உள்ள ஓட்டையா? சட்டத்தரணிகளின் வாதத் திறமையாலா? என்பதே பொதுமக்களின் கேள்வி. இவ்வாறு விடுதலை பெற முடியாதவர்களை ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை பெறுவது நாட்டில் நிலவும் அரசியல் கலாசாரமாக உள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடபில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இரண்டு வருடங்கள் சிறையில் வைக்கப்பட்டிருந்த 16 பேருக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் கடந்த 25ஆம் திகதி பிணை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் சட்டமா அதிபர் அக்கறையின்றி இருப்பது ஏன்? ஒரே நாடு ஒரே சட்டம். ஆனால் தமிழர்கள் அன்னியமாக பார்க்கப்படுகிறனர் என்பதற்கு இது இன்னுமொரு உதாரணமாகும்.

அண்மையில் ஜனாதிபதியோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுமந்திரன், 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை வெளியில் விடுவது தொடர்பாக நீதி அமைச்சரோடு கலந்தாலோசித்து விடுவிக்கப்படுவர் என தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் அத்தனை பேரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களை வகைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போவது, அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் செய்கின்ற துரோகமாகவும் அமையும்  என தெரிவித்துள்ளார்.