நாட்டின் நன்மதிப்பை அழிக்கும் செயலில் காவல்துறையினர்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதற்கும் அமைதியைப் பேணுவதற்கும் காவல்துறையினரின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கு பொலிஸ்மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த வார இறுதியில் பாணந்துறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கட்டுப்படுத்தியமைக்கான காரணங்களை நியாயப்படுத்துமாறும் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

களுத்துறை தலைமைப் பரிசோதகர் இரண்டு பெண்  காவல்துறை  உத்தியோகத்தர்களையும் ஒரு பெண்மணியையும் தள்ளிய சம்பவம் குறித்தும், அமைதிப் பேரணியை சட்டவிரோதமாக தடுத்து நிறுத்தி, பங்கேற்பாளர்களைக் கைது செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்தமை தொடர்பில் தானாக முன்வந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று ஆணைக்குழு முன்னிலையில் பாணந்துறை பொலிஸ் தலைமைப் பரிசோதகரால் ஒப்புக் கொள்ளப்பட்டதன் பிரகாரம் களுத்துறையில் இருந்து ஆரம்பமான ஒரு அமைதியான அணிவகுப்பு பாணந்துறையில் காவல்துறையினரின் தடுத்து நிறுத்தப்பட்டது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அணிவகுப்பை கட்டுப்படுத்தியதற்கான காரணம் மற்றும் யாருடைய கட்டளை அல்லது உத்தரவின் பேரில் காவல்துறையினர் அணிவகுப்பை நிறுத்தினார்கள், யார் அந்த கட்டளைகள் அல்லது உத்தரவுகளை நிறைவேற்றினார்கள் மற்றும் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக காவல்துறையினரால் தொடங்கப்பட்ட நடவடிக்கை போன்றவற்றை வாக்கு மூலமொன்றின் மூலம் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தப்பட்டார்.

பாணந்துறை  காவல்துறை பிரிவிற்கான சிரேஷ்ட  காவல்துறை அத்தியட்சகர் தேவையான கட்டளைகளை வழங்கி பேரணியில் பங்குபற்றுபவர்களை பாதுகாக்க தவறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அவதானித்துள்ளது.

அண்மைக் காலமாக காவல்துறையினரின் பொருத்தமற்ற நடத்தை ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை அழித்துள்ளதுடன், சர்வதேச ரீதியில் நாட்டின் நன்மதிப்பை விரைவாக அழித்து வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு  சுட்டிக்காட்டியுள்ளது.