மேற்கு அவுஸ்திரேலியா Canning Vale பகுதியில், விளையாட்டரங்கு ஒன்றினை நிர்மாணிப்பதற்காக துப்பரவு செய்யப்படவுள்ள விசாலமான காட்டுப்பகுதியிலுள்ள சுமார் 300 கங்காருக்களை சுட்டுக்கொல்வதற்கு அப்பகுதியை சேர்ந்த Council தனது உறுப்பினர்களிடம் திட்டத்தினை முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்தால், குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள காட்டினையும் அதிலுள்ள காங்காருக்களையும் அழிப்பதற்கு Council நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரதேசத்தில் விளையாட்டரங்கினையும் அதற்கான வீதியையும் நிர்மாணிக்கும்போது, வீதியில் கங்காரு நடமாட்டம் அதிகரிக்கும். அது வாகன விபத்துக்களை ஏற்படுத்தும்.
இதனை தவிர்ப்பதற்கு, அங்குள்ள கங்காருக்களை வேறு இடத்துக்கு மாற்றுவதானால், ஒரு கங்காருவுக்கு ஆயிரத்து 600 டொலர்கள்வரை செலவாகும் என்று Council மதிப்பிட்டுள்ளது.
இதனைவிட, கங்காருக்களை சுட்டுக்கொல்வது சுலபமானதும் மலிவானது என்றும் குறிப்பிட்டுள்ள Canning Council, கங்காரு ஒன்றை சுட்டுக்கொல்வதற்கு 30 டொலர் மாத்திரமே செலவாகிறது என்று மதிப்பீடு செய்திருக்கிறது.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்படும் கங்காருக்களை நிச்சயமாக இறைச்சிக்கு பயன்படுத்தமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கங்காருக்களை கொலைசெய்வது மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பினை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்துள்ள குறிப்பிட்ட Council , கங்காருக்களை நஞ்சூட்டி கொலை செய்யாமல் – அவற்றின் இனப்பெருக்கத்தை கொடூரமாக தடுக்காமல்- இயன்றளவு பொறுப்போடு அவற்றின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவே வழி என்று தனது 99 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.