குர்பானை நிறுத்த திட்டம் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி சாடல்

IMG 20210516 WA0015 குர்பானை நிறுத்த திட்டம் -இம்ரான் மஹ்ரூப் எம்.பி சாடல்

ஹஜ் பெருநாள் குர்பான் நடவடிக்கைகளை தடுக்க அரசு மேற் கொண்டுள்ள  நாடகமே, மாடறுப்பை தடை செய்யுமாறு அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம் என திருமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மஹ்ரூப்  சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிடும்போது,

“தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த அரசுக்கு தேசிய மற்றும்  சர்வதேச ரீதியில் பல பக்கம் அழுத்தங்கள் காணப்படுகின்றன. அவர்களின் வெளிநாட்டு கொள்கையால் கடனை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மற்றொரு பக்கம் இனவாதத்தை கொண்டு பொய்களை கூறி ஆட்சிக்கு வந்த இவர்கள் கூறிய பொய்களை மக்கள் உணர தொடங்கியுள்ளனர். இதனால் இவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்த கடும் போக்கு அமைப்புகளே அரசுக்கு எதிராக களமிறங்கி யுள்ளனர்.

இவ்வாறு பல பக்க அழுத்தங்களை எதிர் கொள்ளும் அரசு இந்த அழுத்தங்களில் இருந்து விடுபட தமக்கு எதிராக உள்ள கடும் போக்கு அமைப்புக்களை அமைதிப் படுத்த மேற் கொண்டுள்ள முயற்சியே மாடறுப்பு தடை தொடர்பாக அமைச்சின் செயலாளர் அனுப்பியுள்ள கடிதம்.

இதன் மூலம் அடுத்த வார ஹஜ்ஜூப் பெருநாள் நாட்களில் முஸ்லிம்கள் மேற் கொள்ளும் குர்பான் நடவடிக்கைகளை குழப்பவே அரசு முயற்சிக்கிறது.

இந்த சட்ட மூலம் அமைச்சரவையில் சமர்பிக்கப் பட்ட பின் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு அங்கீகரிக்கப் பட்ட பின் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அதன் பின்னரே இச்சட்ட மூலத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு குறித்த அமைச்சுக்கு உள்ளது.

ஆனால் இவர்கள் வர்த்தமானியில் வெளியிட்ட வைகளையே இன்னமும் நடைமுறைப் படுத்த முடியாமல் இருக்கின்றனர். ஆனால் வர்தமானியில் வெளியிடப் படாத ஒன்றை நடைமுறைப் படுத்த முயற்சிப்பது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு பாராளு மன்றத்தில் சமர்பிக்கப் படாத விடயத்தை நடை முறைப்படுத்த அமைச்சின் செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை.ஆகவே இது தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்களாகிய நாம் நாளை நடை பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பேச எதிர் பார்த்துள்ளோம்” என்றார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021