முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலை கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் “வட்டுவாகல் கோட்டாபய கடற்படை கப்பல்” கடற்படை முகாமுக்கு அபகரிக்கத் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இதே பகுதியில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிலம் அபகரிக்கும் நோக்கில் நில அளவீடு செய்யும் அறிவிப்புக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 8ம் திகதி அன்று திகதியிடப்பட்ட கடிதம் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா. நவஜீவனால் காணி உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், 2021-05-12ம் திகதி முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலின் அடிப்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நில அளவையானது காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05ம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் நில அளவை நாயகத்தால் அளிக்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவின் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் அமைந்துள்ள காணியினை பிரதான கடற்படை முகாம் அமைக்கும் பொருட்டு நில அளவை செய்வதற்காக 2021-07-29ம் திகதி காலை 9.00 மணிக்கு வருகை தந்து தங்கள் காணிகளின் எல்லைகளையும் விபரங்களையும் இனங் காட்டும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.” என்றுள்ளது.