Home செய்திகள் உயர்ந்தபட்ச சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் அதிகார பகிர்வே நிரந்தர தீர்வாகும்; விக்னேஸ்வரன்

உயர்ந்தபட்ச சமஷ்டிக் கட்டமைப்பின் கீழ் அதிகார பகிர்வே நிரந்தர தீர்வாகும்; விக்னேஸ்வரன்

அதிகார பகிர்வே நிரந்தர தீர்வாகும்
“இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசம். வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம். பராதீனப்படுத்தாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவை ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே நிரந்தர தீர்வாகும். சமஷ்டி கட்டமைப்பின் கீழ் இத்தகைய ஒரு நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல கட்சிக் கூட்டத்திற்கு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்ட வரைபு ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றைய கூட்டத்தில் பங்கு பற்ற முடியவில்லை. அவர் சார்பாக இவ் ஆவணம் பேராசிரியர் சிவநாதன் அவர்களால் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. “ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகளின் முடிவு” என்ற தலைப்பிலான இந்த ஆவணத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த இனவாத சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை கவனத்தில் கொண்டும், வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கும், அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையில் இருந்தவாறு முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா காலதாமதம் எதுவும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாஷைகளை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையினையும் பொறுப்பினையும் நாம் வலியுறுத்துவதுடன் அதன் அடிப்படையில் உடனடியாக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் பேசும் மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம். தற்போதைய நிலைமையில் மலையக மக்களும் முஸ்லீம் மக்களும் வாழும் இடங்களில் மாகாணசபைகளை உடனே ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றோம்” எனவும் அவரது ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version